தமிழ் நாட்டில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் செய்த நீங்கள் ஒவ்வொரு சமாதியாக ஒவ்வொரு சிலையாகப் போய் மாலை போடும் சடங்குகளையெல்லாம் தவிர்த்துவிட்டது நல்ல விஷயம். அதே போல உங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தி சென்னை வந்தால் சத்தியமூர்த்தி பவனுக்குப் போகாமல் கலைஞர் வீட்டுக்கோ அறிவாலயத்துக்கோ மட்டும் போகும் பழக்கம் உடையவர். நீங்கள் அதையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் கடந்த 62 வருட வரலாற்றிலேயே இல்லாத முறையில் இளைஞர் காங்கிரசுக்கு உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் புரட்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள். தேசிய நதிகள் இணைப்பை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தது என்னைப் போன்ற சுற்றுச் சூழல் அக்கறையாளர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியைத் தந்தது.
இன்னும் சில மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் ஒரு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்தியிருப்பீர்கள். ஆனால் அந்த அமைப்பு யாரோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா ?
கடைசி கணக்குப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 12 கோஷ்டிகள் காங்கிரசுக்குள் இருக்கின்றன.அவற்றை வழிநடத்துகிற எல்லாரும் பல்வேறு சமயங்களில் நியமனம் மூலமே கட்சிப் பதவிக்கு வந்தவர்கள்.
அவர்களுடன் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் ஒன்றாக வேலை செய்யமுடியும் ? உற்சாகமாக வேலை செய்யத்தொடங்கும் அவர்கள் ஒவ்வொருவரும், சில தினங்களிலேயே விரக்தியை நோக்கி உங்கள் கட்சியின் பெரிசுகளால் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பதுதான் நடைமுறை நிஜம்.
தவிர உங்கள் கட்சிக்குள் இருக்கும் பல கோஷ்டிகளுக்கு சோனியாவைத் தவிர வேறு தலைவர்களும் உண்டு. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் தலைமையைப் பின்பற்றும் அவர்களை எப்படி உங்கள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சமாளிக்கப் போகிறார்கள் ? அதை சமாளிக்காமல் எப்படி அடுத்த தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு தி.மு.க, அ.தி.மு.க இருவரையும் வீழ்த்தும் கனவை நனவாக்கப் போகிறீர்கள் ?
நன்றி : ஞானி.net
No comments:
Post a Comment