கார்ட்டூன் : தினமலர்
All tamil news, tamil jokes, sardar jokes, sms, kadi jokes available here.
என் மனைவி பொரித்து வைத்த அரிசி வற்றலை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தேன். சப்பென்று இருந்தது. வடாம், வற்றல் மட்டுமல்ல... என் நண்பர் ஆறுமுகம் அறிமுகப்படுத்திய கடைகளில் வாங்கிய பொருட்கள் எல்லாம் சுமார் ரகம்தான். இந்த லட்சணத்தில் நான் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டுமாம்.
"போலீஸ் துறையில் வேலை பார்க்கும் ஆறுமுகம் எதற்காக இந்த கடைகளில் விற்கும் பொருட்களுக்கே சிபாரிசு செய்கிறார்? ஒரு வேளை வாராவாரம் போய் மாமூல் வாங்கிக் கொள்வாரோ?
""கோபால்! நான் சொன்ன கடைகளில் விற்கிற பொருட்கள் எல்லாம் ஜெயில்ல இருக்கிற கைதிகள் தயார் செஞ்சு அனுப்புறது. கைதிகள் திருந்தி வாழணும்னு ஜெயிலுக்குள்ளே கைத்தொழில் கத்துக்கொடுத்துட்டு, அப்புறம் அதை நாமளே உதாசீனப்படுத்தினா எந்த சுயநலமும் இல்லைப்பா. கூடிய சீக்கிரம் அவங்களும் தரமா தயாரிப்பாங்க!'' - சிறைக்காவலாளியாகப் பணிபுரியும் என் நண்பர் ஆறுமுகம் என்னிடம் சொல்ல, ஆறுமுகம் அறிமுகப்படுத்திய கடைகளிலேயே தொடர்ந்து பொருட்கள் வாங்க தீர்மானித்தேன்.
நன்றி : குமுதம், தினமலர்.com
வரிசையாக உள்ள பத்து வீடுகளுக்கு மத்தியில் உள்ளதுதான் மதுபாலன் வீடு. ஒரு நாள் நள்ளிரவில் அவரது வீட்டில் திருடன் புகுந்து கத்தியைக் காட்டி பீரோவைத் திறக்கச் சொல்லி மிரட்டவே, அவனை இடித்துக் தள்ளிவிட்டு வெளியே ஓடிவந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு "" தீ ... தீ... ஓடிவாங்க!'' என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து திருடனை மடக்கிப் பிடித்தனர்.
இரண்டு வரிகளில் உலகை அளந்த வள்ளுவருக்கு உள்நாட்டில் 18 ஆண்டுகாலச் சிறைவாசம். 1991ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் அல்சூர் ஏரிக் கரையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை அப்போதைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா திறப்பதாக உறுதி அளித்தார். ஆனால் கன்னட புலிகேசி சங்கம் என்ற அமைப்பு திருவள்ளுவர் சிலையைத் திறக்கக்கூடாது என்று வழக்குப் போட்டது. நடிகர் ராஜகுமாரைக் கடத்தியபோது இதையும் தனது கோரிக்கையாக வைத்தான் சந்தன வீரப்பன். ராஜ்குமார் காட்டில் இருந்தபோது ஒப்புக் கொண்ட கன்னட அமைப்புகள், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டவுடன் அதைக் கைவிட்டன. காவிரிப் பிரச்னை ஒகேனக்கல் பிக்கல் பிடுங்கல் எழும்போதெல்லம் தமிழர்களோடு சேர்ந்து திருவள்ளுவரும் அடிவாங்கிக் கொண்டு இருந்தார்.
அந்தா இந்தா என ஒரு வழியாக திருவள்ளுவருக்கு விடுதலை கிட்டத்தட்ட கைக்கு எட்டும் நிலையில் ஆகஸ்ட் 9ம் தேதி தமிழக முதல்வர் பெங்களூரில் திருவள்ளுவர் தரிசனத்தைத் துவக்கிவைக்க, ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கர்நாடக முதல்வர் முன்னிலையில் கன்னட அறிஞர் சர்வக்ஞரின் சிலை திறக்கப்படுகிறது.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரத்துக்கு வார்த்தைகளில் அத்தனை மகிழ்ச்சி... நெகிழ்ச்சி. கிட்டத்தட்ட 18 ஆண்டுகால கனவு நிறைவேற இருக்கிறது. ஒரு வாரத்தில் சிலை செய்யுங்கள், உடனே திறப்பு விழா நடத்துவோம்! என்று 18 ஆண்டுகளுக்கு முன் பங்காரப்பா கூறியதும் தற்காலிக ஏற்பாடாக ஃபைபரில் திருவள்ளுவர் சிலை செய்தோம். அதுதான் இத்தனை ஆண்டுகளாக கோணிக்குள் அடைந்து கிடந்தது. இப்போது திறப்பு விழா காண இருப்பது 300 கிலோ எடையும் 5 அடி உயரமும் உள்ள வெண்கலச் சிலை. பிரபல சிற்பி மணி நாகப்பா வடித்த சிலைஅது என்றார்.
வாழ்க்கை
கடவுளுடன் சீட்டாடுவது
கொஞ்சம் கடினமானது
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்
ஸ்தல புராணம்
பெருமாள் கோயில் பிராகாரமும்
பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்
ஆயிரங்கால் மண்டபத்தின்
அமானுஷ்ய இருட்டும்கூட
காலத்தில் கரையாமல்
அப்படியே இருக்கின்றன நண்பா!
தன் தம்பியுடன் வந்து
நம் பார்வைகளுடன் திரும்பும்
காயத்ரியின்
கால் தடங்களில் மட்டும்
சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!
மரணம் பற்றிய வதந்தி
திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!
உயில்
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!
குட்டி புத்தரின் கோபம்
"" இவர் பேரு புத்தர்
இன்னொரு பேரு ஆதவன்
அந்தப் பேரைத்தான்
உனக்கு வைத்திருக்கிறேன்!''
என்றேன் மகனிடம்.
கோபமாக சொன்னான்;
""அவர் பேரு புத்தர்
நான்தான் ஆதவன்!'
நெஞ்சொடு கிளத்தல்
சுடலையேகி வேகும் வரை
சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்
உடலைவிட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப் பார்!
உள்ளும் புறமும்
அப்பாவின் சாயலில் உள்ள
பெட்டிக் கடைக்காரரிடம்
சிகரெட் வாங்கும்போதெல்லாம்
விரல்கள் நடுங்கின்றன!
நில் கவனி செல்
மாநகரத்துச் சாலைகளுக்கு
அவ்வப்போது உயிர் கொடுக்கிறது
தொட்டியில் பூத்த
ரோஜாச் செடிகளுடன்
வந்து போகும் மாட்டு வண்டி!
முதல் காதல்
காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை!
- நா.முத்துக்குமார்
நன்றி : தினமலர்.com
நன்றி : ஆனந்த விகடன்
சுதந்திரத்தின் போது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிந்தன. இரு நாடுகளுக்கு இடையிலான நிதி கணக்குகளும் பிரிக்கப்பட்டன. அப்போது இந்தியாவுக்கு பாகிஸ்தான் தர வேண்டிய பாக்கியாக 300 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
1950 - 51ம் ஆண்டு பட்ஜெட்டில் இது கடன் பொறுப்புகள் கணக்கில் காட்டப்பட்டது. அதன்பின், இந்த தொகையை பாகிஸ்தான் திருப்பிக் கொடுக்கவில்லை. முதல் பட்ஜெட்டிலிருந்து தற்போது வரை இந்த கடன் தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கடன் பொறுப்புகள் பிரிவில் நிலுவையில் உள்ளது.
ஆதிமனிதன் பேசத்துவங்கும் முன் அதற்காக செய்த ஆரம்ப கட்ட முயற்சி உரத்து குரல் எழுப்பியது தான். அதைப்போல் எழுதுவதற்காக செய்த முதல் முயற்சிகளில் அவன் சித்திர ரூபங்களிலே தான் எழுத்துக்கள் எழுத துவங்கினான். அவை சித்திர எழுத்துக்கள் எனப்பட்டன. மொழி உருவாவதற்கு முன்பே சித்திர எழுத்துக்கள் உருவாகிவிட்டன.
எண்ணங்களின் வெளிப்பாடு காலப்போக்கில் பேச்சும் எழுத்தும்என்று பரிணமித்தன. பேசும் மொழியும் எழுதும் எழுத்தும் இடம் காலம் வேறுபாடுகளால் மாறுபாடு கொண்டிருந்தாலும் சித்தரங்களில் ஒரு பொதுமைத்துவம் பொலிந்ததுண்டு. ஆயினும் எல்லாவித கலைகளைப்போல அவற்றுக்கும் வகைகளில் வித்தியாசங்கள் இருந்தன.
சுமார் நானூறு ஆண்டுகளுக்குள் உளுவாகியதே தஞ்சாவூர் ஓவியங்கள். மராட்டிய மன்னர்களின் சாம்ராஜ்யம் தஞ்சாவூர் வரை வரவியிருந்த காலக்கட்டத்தில், அவர்களது பிரதிநிதியாக சரபோஜி மன்னரின் ஆட்சியில் படைக்கப்பட்டு வளர்ந்த ஓவியக்கலை தஞ்சாவூர் ஓவியம் எனப்படலானது.
மராட்டியமும் தமிழும் கலந்த பண்பாட்டு உணர்வில் உருவாக்கப்பட்டவை. இவை கோயில்கள், அரண்மனைகள், ஜமீன்கள் மற்றும் செல்வந்தர்களின் வீடுகளில் மட்டமே பெரிதும் காட்சியளித்தன. இயந்திரமயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தென்னிந்திய தொன்மைக்கலைகளை பாதுகாக்கும் அமைப்பு (Rejuventationg the Anvient Arts Of South Indian Art Foundation - RAASI) தஞ்சாவூர் ஓவியங்கள் மட்டுமின்றி வேறுபல கலையம்சங்களையும் பாதுகாத்து வளர்த்துவருகிறது.
நன்றி : மஞ்சரி, தினமலர்
தங்கை கோமதியன் கழுத்தில் தாலியேறியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட தாமோதரனுக்கு மாப்பிள்ளைவீட்டார் சிலரின் பாராட்டுதான் புரியவில்லை.
வீட்டை அடமானம் வெச்சாவது தங்கச்சி கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கற அண்ணன் கிடைக்க கோமதி குடுத்து வைச்சிருக்கணும்.
தாமோதரன் குழம்பிப் போனான்.
பத்து வருடம் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்த காசைக் கொண்டுதானே கல்யாணத்தை முடிச்சிருக்கிறேன். இவர்கள் ஏன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோமதி வந்துதான் குழப்பத்தைத் தீர்த்தாள்.
என்ன அநியாயம்மா, நான் வசதி படைச்சவன்னு தெரிஞ்சதும் முப்பது பவுன் நகை போடணும். வரதட்சணையா இருபதாயிரம் ரூபாய் கொடுக்கணும். பட்டுப் புடவை பத்துப் பதினைந்து வாங்கணும். அப்படி இப்படின்னு இன்னொரு கல்யாணம் நடக்க எவ்வளவு பணம் தேவையோ, அந்த அளவுக்கு நாக்கூசாம கேக்கறி�ங்களேம்மா என்றார் ஏகாம்பரம் தம் மகள் மல்லிகாவிடம்.
செஞ்சுடுங்கப்பா! என்றாள் மல்லிகா
என்னம்மா சொல்றே?
ஏதோ ஒரு காரணத்தாலே எனக்கு கல்யாணம் நடக்காமலே இருந்ததில்லே? அப்போ நீங்க சுவாமிக்கிட்டே என்ன வேண்டிகிட்டீங்க? எனக்கு கல்யாணம் நடந்தா சில ஏழைப் பெண்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டீங்க... இல்லையாப்பா?
ஆமாம்!
சில ஏழைப் பெண்களுக்கு நீங்க கல்யாணம் செய்துவைக்க வேண்டாம்பா... ஒரு பெண்ணுக்கு கல்யாணமாக உதவி செய்யுங்கப்பா போதும்... பிள்ளை வீட்டிலே கல்யாண வயசுல ஒரு பெண் இருக்காப்பா... அவளுக்கு “கல்யாணம் செய்து வைக்கப் பணமில்லை. பிள்ளைக்கு கல்யாணம் செஞ்சு வச்சா அதன்மூலமா பெண்ணுக்கு கல்யாணம் ய்துலாமேன்னு நெனைச்சு கேக்குறாங்கப்பா!
செஞ்சுடறேன்ம்மா! என்றார் ஏகாம்பரம்.
- சுகந்தி
நன்றி : குமுதம், தினமலர்
என் ரத்தக் கொதிப்பை ஒவ்வொரு வேளையும் அதிகரிப்பதற்கான நிகழ்ச்சிகள் எப்போதும் நடந்துகொண்டே இருக்கின்றன
. டி.வி.பார்க்காமல், செய்தித்தாள் படிக்காமல், வீட்டுக்குள் ஏ.சி. அறையில் முடங்கி, வெளியே சென்றால் ஏ.சி. காரில் பயணித்து, ஏ.சி. அலுவலாத்தில் அமர்ந்து வாழ்க்கை நடத்தினால் மட்டுமே இந்த ரத்தக் கொதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். பல அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் இப்படி வாழ்க்கை நடத்தித்தான் சுரணை கெட்டுக் கிடக்கிறார்களோ என்று தோன்றுகிறது
எரிச்சல் 1:
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சமபளம் 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தவிர கார் அலவன்ஸ் மட்டும் 20 ஆயிரம் ருபாய். இன்னும் பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு. தொகுதி மேம்பாட்டு நிதி வேறு ஒரு கோடி 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி 70 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது
.இந்த அளவு வாங்கும் சம்பளத்துக்கு அவர்கள் என்ன வேலை பார்த்தார்கள் என்று கணக்கிட்டால் எரிச்சல்தான் வருகிறது
. ஒரே நாளில் 30 சட்டங்களை நிறைவேற்றித் தள்ளுகிறார்கள். அந்தக் களைப்பு தீர அரசு செலவில் முதலமைச்சரால், 46 ஐட்டங்களுடன் தாஜ் கோரமாண்டல் நட்சத்திர ஓட்டலில் விருந்து வேறு வைக்கப்படுகிறது. (ஒரு சாப்பாட்டின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்)
ஐந்து வருடத்துக்குப் பிறகு மறுபடியும் எம்.எல்.ஏ ஆவாரா மாட்டாரா என்று நிச்சயமில்லாத ஒரு பதவியை வகிக்கும் இவர்களுக்கு சென்னை நகரில் அரசின் மலிவு விலையில் ஆளுக்கு இரண்டரை கிரவுண்டு வீட்டு மனை வேறு வேண்டுமாம். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் இந்த கோரிக்கையை வைத்ததும் முதல்வர் இன்னும் நூறு எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் கோரிக்கை மனு கொடுங்கள் என்கிறார். அடுத்த 30 நிமிடங்களில் 105 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் மனு வந்துவிடுகிறது ! அட உலக மகா உத்தமர்களே ... உங்கள் சட்டமன்ற வாழ்க்கையில் எந்த மக்கள் பிரச்சினைக்காவது இப்படி 30 நிமிடத்துக்குள் நூறு பேர் ஒன்று சேர்ந்ததுண்டா ?
சென்னை வரும்போதெல்லாம் எம்.எல்.ஏக்கள் தங்குவதற்கு கிரானைட்டும் டைல்சும் போட்டு இழைத்த ஹாஸ்டல் என்ற பெயரிலான அபார்ட்மெண்ட்டுகள் இருகின்றன. பலவற்றில் தொகுதியிலிருந்து வருகிற யார் யாரோ தங்குகிறார்கள். இது தவிர சென்னையில் வீட்டு மனைவேறு வேண்டுமாம். ஐந்தாண்டுக்கு ஒரு முறை243 எம்.எல்.ஏக்களுக்கும் சென்னையில் வீட்டு மனை ஒதுக்கிக் கொண்டே வந்தால் ஐந்தே வருடங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனைகளை ஒதுக்க வேண்டும். கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்க் கரையோரங்களில் குடிசைகளில் வசித்துக் கொண்டிருந்த உழைக்கும் உதிரித்தொழிலாளர்களை காலி செய்து சென்னைக்கு வெளியே துரத்துவதைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்டு அவையையே நிலைகுலைய செய்த சரித்திரமே இல்லை. தான் ரியல் எஸ்டேட் தாதா ஆவதற்காக 30 நிமிடத்தில் கையெழுத்து போட்டு குவிக்கிறார்கள். உருப்படுமா இந்த தேசம் ? உருப்படுமா அரசியல் ?
எரிச்சல் 2:
சுமார் ஒரு கோடி ருபாய் செலவில் சென்னையில் கே.கே. நகர் என்று அழைக்கப்படும் கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கும் ஒரு பூங்கா புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கே.கே. நகர் என்ற அராஜகமான பெயரைப் போல எம்.கே.பி நகர் என்று ஒரு நகரும் சென்னையில் அழைக்கப்படுகிரது. மகா கவி பாரதி நகரின் சுருக்கமாம். இந்தப் பெயர்களை எல்லாம் கலைஞர் நகர், பாரதி நகர் என்று எளிமையாக வைத்திருந்தால் இந்த சுருக்க அராஜகம் நிகழ்ந்திராது.
கலைஞர் நகர் பூங்காவையும் இன்னும் பல புதுப்பிக்கப்பட்ட பூங்காக்களையும் அசல் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வாரம் திறந்துவைத்தார்.
இந்தப் பூங்காவுக்கு சிவன் பூங்கா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் நகர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் உருவானபோது இந்தப் பூங்காவின் பெயர் ஜீவா பூங்கா. பொது உடமை இயக்கத்தலைவரும் சுயமரியாதை இயக்க முன்னோடியுமான அதே ஜீவாதான்.
கலைஞர் நகர் உருவாக்கப்பட்டபோது எல்லா தெருக்களுக்கும் நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் பெயர்களை சூட்டுவதென்று திட்டமிட்டு சூட்டப்பட்டன. லட்சுமணசாமி, ராமசாமி, அழகிரிசாமி, முனுசாமி, ராஜமன்னார், பி.டி.ராஜன், ஏ..பி. பாத்ரோ என்றெல்லாம் தெருப்பெயர்கள் சூட்டியபிறகு பூங்காவுக்கு ஜீவா பெயர் வைக்கப்பட்டது. இப்போது ஜீவா பூங்கா சிவன் பூங்காவாகிவிட்டது எப்படி ? சில வருடங்கள் முன்பு பூங்காவுக்குள் திடீரென்று ஒரு சிவன் சிலை முளைத்தது சிறு குன்று போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் சிவன் சிலை வைத்தது யார் என்பதை சென்னை மாநகராட்சிதான் விளக்க வேண்டும். பினர் பூங்காவை பொது மக்கள் சிவன் பூங்கா என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இப்போது புதுப்பித்தபின்னர், மாநகராட்சியே சிவன் பூங்கா என்று உலோக எழுத்துக்களை பதித்துவிட்டது. அதை ஸ்டாலின் திறந்துவைத்திருகிறார். பொதுப் பூங்காவுக்குள் சிவன் சிலை எப்படி வந்தது ? எப்போது வந்தது ? யார் வைத்தார்கள் ? இதே போல ஒவ்வொரு பொதுப் பூங்காவிலும் வெவ்வேறு மத அடையாளங்களை சாமர்த்தியமாக கொண்டு வந்து நுழைத்தால், அதை மாநகராட்சி ஏற்று அங்கீகரித்துவிடுமா ?
ஒரு கோடி ரூபாய் செலவில் கலைஞர் நகரின் பூங்காவைப் புதுப்பித்த அரசு நிர்வாகம் இந்த நகரின் ஒவ்வொரு சாலையும் தனியார் முதலாளிகளால் ஆக்ரமிக்கப்படுவதைக் கண்டு கொள்வதே இல்லை. எல்லா சாலைகளையும் வெவ்வேறு டிராவல்ஸ் கம்பெனிகள் கார் பார்க்கிங்காக ஆக்கிவைத்திருக்க்கின்றன. ஆர்.கே.சண்முகம் சாலையில் சரி பாதியை எண்ணேய் லாரிகளும் டிராவல்ஸ் வண்டிகளும் ஓட்டல் வாகனங்களும் ஆக்ரமிக்கின்றன. பி.டி.ராஜன் சாலையில் டெம்போ வாகனங்கள். லட்சுமணசமி சாலையில் ஒரு டிராவல்ஸ் கம்பெனி நடைபாதை மீதே கார்களை நிறுத்துகிறது. இன்னொரு ஷாமியானா கம்பெனி நடைபாதையை தன் வேன்களை நிறுத்தவும் நாற்காலி, கூடார கோடவுனாகவும் பயன்படுத்துகிறது. இது தவிர கோவில் ஆக்ரமிப்பு வேறு. இந்த வாகனங்களின் டிரைவர்களுக்கு கழிப்பிடங்களாக அருகில் உள்ள வீட்டுச் சுவர்கள் ஆக்கப்படுகின்றன. ஒரு குடியிருப்புப் பகுதி இப்படி சீரழிக்கப்படுவதை கேள்வி கேட்கக் கூட இங்கே ஆளில்லை. கலைஞர் நகரின் ஒவ்வொரு தெருவும் இப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால், நடைபாதைகளில் நடக்கவே முடியாமல் என்னைப் போன்ற முதியவர்கள் பலர் திண்டாடுகிறோம்.
எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் கலைஞர் நகர் சந்திக்கும் இடத்தில் நிரந்தர புதைகுழியாக சாலை பல வருடங்களாக இருக்கிறது. ராமசாமி சாலை, லட்சுமண சாமி சாலை, அழகிரிசாமி சாலை சந்திப்புகளில் திரும்பத் திரும்ப சாலைகள் தோண்டப்பட்டு புழுதி பரப்பும் மண் சாலைகளாக அவை நிரந்தரமாக ஆகிவிட்டன.
அரசு இயந்திரத்தின் அலட்சியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, முதலமைச்சர் பெயரில் இருக்கும் நகர் இருப்பது எவ்வளவு பொருத்தமானது ! உதயம் தியேட்டர் சந்திப்பருகே இருக்கும் ,கலைஞர் கருணாநிதி நகர் என்று நகரின் பெயரை அறிவிக்கும் பலகை கூட உடைந்து எழுத்துகள் காணாமல் போய் சிதிலமாகி, அரசின் பொறுப்பின்மைக்கு பொருத்தமான கல்வெட்டாக திகழ்கிறது !
தெருவில் நடக்கவே முடியாது . காரில் பூங்காவிற்குப் போய் அங்கே சுற்றி சுற்றி நடக்க எல்லா வசதிகளும் செய்யப்படும் என்பதுதான் சிங்காரச் சென்னையின் கொள்கை போலிருக்கிறது!
எரிச்சல் 3:
பீஹார் தலைநகரான பாட்னாவின் தெருக்களில் பட்டப்பகலில் ராகேஷ் எனபவனும் அவன் நண்பர்களும் சேர்ந்துகொண்டு ஒரு இருபது வயதுப் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து உர்வலமாக அழைத்துச் சென்றதை ஒரு மணி நேரத்துக்கும் மேல் அருகிலிருந்து போலீஸ் வேடிக்கை பார்த்திருக்கிறது. பொது மக்களும் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். மீடியா, பத்திரிகையாளர்கள் படமெடுத்து நிகழ்ச்சியை செய்தியாக்கியிருக்கிறார்கள்
இப்படிப்பட்ட அராஜகங்களில் பத்திரிகையாளர்களோ மீடியா நிருபர்களோ தலையிட்டு தடுக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களும் சேர்ந்து உதை வாங்குவார்கள். வெளியே தெரியாமலே போய்விடக் கூடிய ஓர் அராஜகத்தை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பதே அவர்கள் தொழிலின் நியாயமாகும்., ஆனால் பொது மக்கள் பெரும் திரளாக நினைத்தால் இப்படிப்பட்ட அராஜகங்களைத் தடுக்க முடியும். போலீஸ் தடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் நடவடிக்கை எடுத்தது என்பது வெட்கக்கேடான விஷயம்.
அந்தப் பெண் ஒரு செக்ஸ் தொழிலாளி. ராகேஷ் எனபவ்ன் ஒரு விபசாரத் தரகன். அவளுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்து வந்திருக்கிறான் என்றெல்லாம் போலீஸ் அதிகாரிகள் இப்போது சொல்கிறார்கள். ஒரு பெண் செக்ஸ் தொழிலாளி என்பதால் அவளை பொது இடத்தில் அடித்து உதைத்து நிர்வாணமாக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனல் பொது மக்களுக்கு ரகசியமாக செக்ஸ் தொழில் தேவை. பகிரங்கமாக ஒழுக்க சீலர்கள் வேடமும் தேவை . இதுதான் இந்தியாவில் பீஹார் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் நம் பொது மக்களின் யோக்கியதை.
நெட்டை மரங்களென நின்று புலம்பினார் என்பான் பாஞ்சாலி சபதத்தில் பாரதி. பீஹாரில் வேடிக்கை பார்த்தவர்கள் புலம்பியதாகக் கூடத் தெரியவில்லை.
நம் சமுகத்தில் பொது மக்களுக்கு எதற்கெல்லாம் ஆத்திரம் வரும் ஆவேசம் வரும் என்ற அளவுகோல்கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலின்போது ஒரு தொகுதியில் மக்களுக்கு கவரில் வெறும் ( !) 50 ரூபாய் தரப்பட்டதாம். வேட்பாளர் 250 ரூபாய் கொடுத்திருக்கிறார்; அதை விநியோகித்தவர்கள் ஏமாற்றிவிட்டாகள், என்று வெகுண்டெழுந்த பொதுமக்கள் ஆயிரகணக்கில் கூடி கட்சி தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள். வேட்பாளரே நேரில் வந்து இது எம்.எல்.ஏ தேர்தல் அல்ல; எம்.பி தேர்தல். இதை விட அதிகப் பணம் கொடுக்க இயலாது; தான் கொடுத்ததே 50 ரூபாய்தான் என்று பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தபின்னர் மக்கள் வருத்தத்துடன் கலைந்து போனார்களாம்.
இது நடந்தது தமிழகத்தில்தான்.
எங்கே போகிறோம் நாம் ?
நன்றி : ஞானி, ஞானி.நெட்
வீடு தேடி வரும் சினிமா இயக்கம்
கோலம் - ஏன் ? எதற்கு ? எப்படி ?
நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.
எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும் பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்ளும¢ இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறாரகள். இந்தப் புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள் முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்
For details gnani.net
|