Tuesday, August 18, 2009

தமிழ் கவிதைகள்

வாழ்க்கை


கடவுளுடன் சீட்டாடுவது

கொஞ்சம் கடினமானது

எவ்வளவு கவனமாக இருந்தாலும்

பார்க்காமலே அறிந்துக்கொள்கிறார்



ஸ்தல புராணம்



பெருமாள் கோயில் பிராகாரமும்

பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும்

ஆயிரங்கால் மண்டபத்தின்

அமானுஷ்ய இருட்டும்கூட

காலத்தில் கரையாமல்

அப்படியே இருக்கின்றன நண்பா!

தன் தம்பியுடன் வந்து

நம் பார்வைகளுடன் திரும்பும்

காயத்ரியின்

கால் தடங்களில் மட்டும்

சிமென்ட் பூசியிருக்கிறார்கள்!



மரணம் பற்றிய வதந்தி



திருஷ்டி கழிந்தது என்றார்கள்

தீர்க்காயுசு என்றார்கள்

படபடத்தோம் என்றார்கள்

எப்போதோ எழுதிய

என் கவிதையைச் சொன்னேன்..



"இறந்துபோனதை



அறிந்த பிறகுதான்

இறக்க வேண்டும் நான்!



உயில்



மகன் பிறந்த பிறகுதான்



அப்பாவின் பாசத்தை

அறிந்துகொள்ள முடிந்தது



என் அன்பு மகனே



உன் மகன் பிறந்ததும்

என்னை நீ அறிவாய்!



குட்டி புத்தரின் கோபம்



"" இவர் பேரு புத்தர்

இன்னொரு பேரு ஆதவன்

அந்தப் பேரைத்தான்

உனக்கு வைத்திருக்கிறேன்!''


என்றேன் மகனிடம்.

கோபமாக சொன்னான்;

""அவர் பேரு புத்தர்

நான்தான் ஆதவன்!'



நெஞ்சொடு கிளத்தல்


சுடலையேகி வேகும் வரை

சூத்திரம் இதுதான் சுற்றுப் பார்

உடலைவிட்டு வெளியேறி

உன்னை நீயே உற்றுப் பார்!



உள்ளும் புறமும்



அப்பாவின் சாயலில் உள்ள



பெட்டிக் கடைக்காரரிடம்

சிகரெட் வாங்கும்போதெல்லாம்

விரல்கள் நடுங்கின்றன!



நில் கவனி செல்



மாநகரத்துச் சாலைகளுக்கு

அவ்வப்போது உயிர் கொடுக்கிறது

தொட்டியில் பூத்த

ரோஜாச் செடிகளுடன்

வந்து போகும் மாட்டு வண்டி!



முதல் காதல்

காற்றில் பறந்து

பறவை மறைந்த பிறகும்

கிளை தொடங்கிய



நடனம் முடியவில்லை!



- நா.முத்துக்குமார்



நன்றி : தினமலர்.com

நன்றி : ஆனந்த விகடன்

No comments:

Post a Comment