Monday, August 17, 2009

மூன்று எரிச்சல்கள்

என் ரத்தக் கொதிப்பை ஒவ்வொரு வேளையும் அதிகரிப்பதற்கான நிகழ்ச்சிகள் எப்போதும் நடந்துகொண்டே இருக்கின்றன

. டி.வி.பார்க்காமல், செய்தித்தாள் படிக்காமல், வீட்டுக்குள் ஏ.சி. அறையில் முடங்கி, வெளியே சென்றால் ஏ.சி. காரில் பயணித்து, .சி. அலுவலாத்தில் அமர்ந்து வாழ்க்கை நடத்தினால் மட்டுமே இந்த ரத்தக் கொதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். பல அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் இப்படி வாழ்க்கை நடத்தித்தான் சுரணை கெட்டுக் கிடக்கிறார்களோ என்று தோன்றுகிறது


எரிச்சல் 1:

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சமபளம் 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தவிர கார் அலவன்ஸ் மட்டும் 20 ஆயிரம் ருபாய். இன்னும் பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு. தொகுதி மேம்பாட்டு நிதி வேறு ஒரு கோடி 50 லட்சத்திலிருந்து ஒரு கோடி 70 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது

.இந்த அளவு வாங்கும் சம்பளத்துக்கு அவர்கள் என்ன வேலை பார்த்தார்கள் என்று கணக்கிட்டால் எரிச்சல்தான் வருகிறது

. ஒரே நாளில் 30 சட்டங்களை நிறைவேற்றித் தள்ளுகிறார்கள். அந்தக் களைப்பு தீர அரசு செலவில் முதலமைச்சரால், 46 ஐட்டங்களுடன் தாஜ் கோரமாண்டல் நட்சத்திர ஓட்டலில் விருந்து வேறு வைக்கப்படுகிறது. (ஒரு சாப்பாட்டின் விலை சுமார் ஆயிரம் ரூபாய் என்கிறார்கள்)

ஐந்து வருடத்துக்குப் பிறகு மறுபடியும் எம்.எல்.ஏ ஆவாரா மாட்டாரா என்று நிச்சயமில்லாத ஒரு பதவியை வகிக்கும் இவர்களுக்கு சென்னை நகரில் அரசின் மலிவு விலையில் ஆளுக்கு இரண்டரை கிரவுண்டு வீட்டு மனை வேறு வேண்டுமாம். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் இந்த கோரிக்கையை வைத்ததும் முதல்வர் இன்னும் நூறு எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் கோரிக்கை மனு கொடுங்கள் என்கிறார். அடுத்த 30 நிமிடங்களில் 105 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் மனு வந்துவிடுகிறது ! அட உலக மகா உத்தமர்களே ... உங்கள் சட்டமன்ற வாழ்க்கையில் எந்த மக்கள் பிரச்சினைக்காவது இப்படி 30 நிமிடத்துக்குள் நூறு பேர் ஒன்று சேர்ந்ததுண்டா ?

சென்னை வரும்போதெல்லாம் எம்.எல்.ஏக்கள் தங்குவதற்கு கிரானைட்டும் டைல்சும் போட்டு இழைத்த ஹாஸ்டல் என்ற பெயரிலான அபார்ட்மெண்ட்டுகள் இருகின்றன. பலவற்றில் தொகுதியிலிருந்து வருகிற யார் யாரோ தங்குகிறார்கள். இது தவிர சென்னையில் வீட்டு மனைவேறு வேண்டுமாம். ஐந்தாண்டுக்கு ஒரு முறை243 எம்.எல்.ஏக்களுக்கும் சென்னையில் வீட்டு மனை ஒதுக்கிக் கொண்டே வந்தால் ஐந்தே வருடங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனைகளை ஒதுக்க வேண்டும். கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்க் கரையோரங்களில் குடிசைகளில் வசித்துக் கொண்டிருந்த உழைக்கும் உதிரித்தொழிலாளர்களை காலி செய்து சென்னைக்கு வெளியே துரத்துவதைப் பற்றி சட்டசபையில் கேள்வி கேட்டு அவையையே நிலைகுலைய செய்த சரித்திரமே இல்லை. தான் ரியல் எஸ்டேட் தாதா ஆவதற்காக 30 நிமிடத்தில் கையெழுத்து போட்டு குவிக்கிறார்கள். உருப்படுமா இந்த தேசம் ? உருப்படுமா அரசியல் ?

எரிச்சல் 2:

சுமார் ஒரு கோடி ருபாய் செலவில் சென்னையில் கே.கே. நகர் என்று அழைக்கப்படும் கலைஞர் கருணாநிதி நகரில் இருக்கும் ஒரு பூங்கா புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. கே.கே. நகர் என்ற அராஜகமான பெயரைப் போல எம்.கே.பி நகர் என்று ஒரு நகரும் சென்னையில் அழைக்கப்படுகிரது. மகா கவி பாரதி நகரின் சுருக்கமாம். இந்தப் பெயர்களை எல்லாம் கலைஞர் நகர், பாரதி நகர் என்று எளிமையாக வைத்திருந்தால் இந்த சுருக்க அராஜகம் நிகழ்ந்திராது.

கலைஞர் நகர் பூங்காவையும் இன்னும் பல புதுப்பிக்கப்பட்ட பூங்காக்களையும் அசல் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வாரம் திறந்துவைத்தார்.

இந்தப் பூங்காவுக்கு சிவன் பூங்கா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் நகர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் உருவானபோது இந்தப் பூங்காவின் பெயர் ஜீவா பூங்கா. பொது உடமை இயக்கத்தலைவரும் சுயமரியாதை இயக்க முன்னோடியுமான அதே ஜீவாதான்.

கலைஞர் நகர் உருவாக்கப்பட்டபோது எல்லா தெருக்களுக்கும் நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் பெயர்களை சூட்டுவதென்று திட்டமிட்டு சூட்டப்பட்டன. லட்சுமணசாமி, ராமசாமி, அழகிரிசாமி, முனுசாமி, ராஜமன்னார், பி.டி.ராஜன், ..பி. பாத்ரோ என்றெல்லாம் தெருப்பெயர்கள் சூட்டியபிறகு பூங்காவுக்கு ஜீவா பெயர் வைக்கப்பட்டது. இப்போது ஜீவா பூங்கா சிவன் பூங்காவாகிவிட்டது எப்படி ? சில வருடங்கள் முன்பு பூங்காவுக்குள் திடீரென்று ஒரு சிவன் சிலை முளைத்தது சிறு குன்று போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் சிவன் சிலை வைத்தது யார் என்பதை சென்னை மாநகராட்சிதான் விளக்க வேண்டும். பினர் பூங்காவை பொது மக்கள் சிவன் பூங்கா என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இப்போது புதுப்பித்தபின்னர், மாநகராட்சியே சிவன் பூங்கா என்று உலோக எழுத்துக்களை பதித்துவிட்டது. அதை ஸ்டாலின் திறந்துவைத்திருகிறார். பொதுப் பூங்காவுக்குள் சிவன் சிலை எப்படி வந்தது ? எப்போது வந்தது ? யார் வைத்தார்கள் ? இதே போல ஒவ்வொரு பொதுப் பூங்காவிலும் வெவ்வேறு மத அடையாளங்களை சாமர்த்தியமாக கொண்டு வந்து நுழைத்தால், அதை மாநகராட்சி ஏற்று அங்கீகரித்துவிடுமா ?

ஒரு கோடி ரூபாய் செலவில் கலைஞர் நகரின் பூங்காவைப் புதுப்பித்த அரசு நிர்வாகம் இந்த நகரின் ஒவ்வொரு சாலையும் தனியார் முதலாளிகளால் ஆக்ரமிக்கப்படுவதைக் கண்டு கொள்வதே இல்லை. எல்லா சாலைகளையும் வெவ்வேறு டிராவல்ஸ் கம்பெனிகள் கார் பார்க்கிங்காக ஆக்கிவைத்திருக்க்கின்றன. ஆர்.கே.சண்முகம் சாலையில் சரி பாதியை எண்ணேய் லாரிகளும் டிராவல்ஸ் வண்டிகளும் ஓட்டல் வாகனங்களும் ஆக்ரமிக்கின்றன. பி.டி.ராஜன் சாலையில் டெம்போ வாகனங்கள். லட்சுமணசமி சாலையில் ஒரு டிராவல்ஸ் கம்பெனி நடைபாதை மீதே கார்களை நிறுத்துகிறது. இன்னொரு ஷாமியானா கம்பெனி நடைபாதையை தன் வேன்களை நிறுத்தவும் நாற்காலி, கூடார கோடவுனாகவும் பயன்படுத்துகிறது. இது தவிர கோவில் ஆக்ரமிப்பு வேறு. இந்த வாகனங்களின் டிரைவர்களுக்கு கழிப்பிடங்களாக அருகில் உள்ள வீட்டுச் சுவர்கள் ஆக்கப்படுகின்றன. ஒரு குடியிருப்புப் பகுதி இப்படி சீரழிக்கப்படுவதை கேள்வி கேட்கக் கூட இங்கே ஆளில்லை. கலைஞர் நகரின் ஒவ்வொரு தெருவும் இப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால், நடைபாதைகளில் நடக்கவே முடியாமல் என்னைப் போன்ற முதியவர்கள் பலர் திண்டாடுகிறோம்.

எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட் கலைஞர் நகர் சந்திக்கும் இடத்தில் நிரந்தர புதைகுழியாக சாலை பல வருடங்களாக இருக்கிறது. ராமசாமி சாலை, லட்சுமண சாமி சாலை, அழகிரிசாமி சாலை சந்திப்புகளில் திரும்பத் திரும்ப சாலைகள் தோண்டப்பட்டு புழுதி பரப்பும் மண் சாலைகளாக அவை நிரந்தரமாக ஆகிவிட்டன.

அரசு இயந்திரத்தின் அலட்சியத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, முதலமைச்சர் பெயரில் இருக்கும் நகர் இருப்பது எவ்வளவு பொருத்தமானது ! உதயம் தியேட்டர் சந்திப்பருகே இருக்கும் ,கலைஞர் கருணாநிதி நகர் என்று நகரின் பெயரை அறிவிக்கும் பலகை கூட உடைந்து எழுத்துகள் காணாமல் போய் சிதிலமாகி, அரசின் பொறுப்பின்மைக்கு பொருத்தமான கல்வெட்டாக திகழ்கிறது !

தெருவில் நடக்கவே முடியாது . காரில் பூங்காவிற்குப் போய் அங்கே சுற்றி சுற்றி நடக்க எல்லா வசதிகளும் செய்யப்படும் என்பதுதான் சிங்காரச் சென்னையின் கொள்கை போலிருக்கிறது!

எரிச்சல் 3:

பீஹார் தலைநகரான பாட்னாவின் தெருக்களில் பட்டப்பகலில் ராகேஷ் எனபவனும் அவன் நண்பர்களும் சேர்ந்துகொண்டு ஒரு இருபது வயதுப் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து உர்வலமாக அழைத்துச் சென்றதை ஒரு மணி நேரத்துக்கும் மேல் அருகிலிருந்து போலீஸ் வேடிக்கை பார்த்திருக்கிறது. பொது மக்களும் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். மீடியா, பத்திரிகையாளர்கள் படமெடுத்து நிகழ்ச்சியை செய்தியாக்கியிருக்கிறார்கள்

இப்படிப்பட்ட அராஜகங்களில் பத்திரிகையாளர்களோ மீடியா நிருபர்களோ தலையிட்டு தடுக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவர்களும் சேர்ந்து உதை வாங்குவார்கள். வெளியே தெரியாமலே போய்விடக் கூடிய ஓர் அராஜகத்தை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பதே அவர்கள் தொழிலின் நியாயமாகும்., ஆனால் பொது மக்கள் பெரும் திரளாக நினைத்தால் இப்படிப்பட்ட அராஜகங்களைத் தடுக்க முடியும். போலீஸ் தடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் நடவடிக்கை எடுத்தது என்பது வெட்கக்கேடான விஷயம்.

அந்தப் பெண் ஒரு செக்ஸ் தொழிலாளி. ராகேஷ் எனபவ்ன் ஒரு விபசாரத் தரகன். அவளுக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்து வந்திருக்கிறான் என்றெல்லாம் போலீஸ் அதிகாரிகள் இப்போது சொல்கிறார்கள். ஒரு பெண் செக்ஸ் தொழிலாளி என்பதால் அவளை பொது இடத்தில் அடித்து உதைத்து நிர்வாணமாக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனல் பொது மக்களுக்கு ரகசியமாக செக்ஸ் தொழில் தேவை. பகிரங்கமாக ஒழுக்க சீலர்கள் வேடமும் தேவை . இதுதான் இந்தியாவில் பீஹார் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் நம் பொது மக்களின் யோக்கியதை.

நெட்டை மரங்களென நின்று புலம்பினார் என்பான் பாஞ்சாலி சபதத்தில் பாரதி. பீஹாரில் வேடிக்கை பார்த்தவர்கள் புலம்பியதாகக் கூடத் தெரியவில்லை.

நம் சமுகத்தில் பொது மக்களுக்கு எதற்கெல்லாம் ஆத்திரம் வரும் ஆவேசம் வரும் என்ற அளவுகோல்கள் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலின்போது ஒரு தொகுதியில் மக்களுக்கு கவரில் வெறும் ( !) 50 ரூபாய் தரப்பட்டதாம். வேட்பாளர் 250 ரூபாய் கொடுத்திருக்கிறார்; அதை விநியோகித்தவர்கள் ஏமாற்றிவிட்டாகள், என்று வெகுண்டெழுந்த பொதுமக்கள் ஆயிரகணக்கில் கூடி கட்சி தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள். வேட்பாளரே நேரில் வந்து இது எம்.எல்.ஏ தேர்தல் அல்ல; எம்.பி தேர்தல். இதை விட அதிகப் பணம் கொடுக்க இயலாது; தான் கொடுத்ததே 50 ரூபாய்தான் என்று பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்தபின்னர் மக்கள் வருத்தத்துடன் கலைந்து போனார்களாம்.

இது நடந்தது தமிழகத்தில்தான்.

எங்கே போகிறோம் நாம் ?



நன்றி : ஞானி, ஞானி.நெட்

No comments:

Post a Comment